என் பாதை நாசமாகி
என் முதுகு சொறிந்து கிழிக்கப்பட்டு
என் ஆன்மாவின்
அவையங்கள் உடைக்கப்பட்டு
ஒவ்வொரு திசையும்
தலைகீழாக செம்பகம் பறக்கப் பழகிவிட்டது.
சப்பிக் குதறிய
மனிதனின் வாடை
மேலாடை கழற்றிய
நல்லபாம்பின் படம் என
தெருவையும் மனிதனையும்
பதுங்கிப் பிழியும் வடுக்கள்.
என் கல் உடைக்கப்பட்டு
செதில்கள் சுரண்டப்பட்டுவிட்டன.
பூனை குறுக்கறுத்த போது
என் பயணம் நன்மையாய்ப் போகவில்லை
என்றே மூடப்படுத்திய நாட்கள்
என் பாழ் கிணற்றிலிருந்து
வீசும் துர்வாசம்
ஒரு சவத்தையோ
ஒரு கடைவாய்ப் பல்லையொ
அடையாளப்படுத்தத் தவறிவிட்டது.
எனவே, வேதனையின்
எல்லாக் குமிழ்களும்
அணைக்கப்பட்டுவிட்டன.
ஒரு மின்னல் துலங்காத உருவம்
என் ஆன்மா
இன்னம் அலையும் கருவெளியில்
என் கோவணம்
இன்னொரு பக்கம்
இன்னொரு பக்கமாக
அவிழ்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த காக்கைக் குஞ்சு
வாயின் சிவப்பு நிறம் மாறும் வரையேனும்
நான் உணவு ஊட்டிக்கொண்டிருக்க
யாரும் என் தென்னையில்
கரங்களைப் பதிக்க இயலாமல் இருக்க.
No comments:
Post a Comment