எனது மண் சிவந்துகொண்டிருக்கிறது.
ஒரு நிகழ்வில் குரவைக்கு கூடிய பெண்கள்
சப்பித் துப்பிய வெற்றிலைச்சாற்றின்
வர்ணமாகிக்கொண்டிருக்கிறது.
இந்த மண்ணில்தான்
எனது தொப்பிள்கொடியும்
அறுத்து வீசப்பட்டது.
எனது கன்னி மொழியும் சிதறிக்கிடந்தது.
நான் கழித்த சிறுபிள்ளைச்
சிறுநீர் ஓடையின்; சலசலவும்
நான் விட்ட காட்டு மலத்தின் துவையலும்
இங்குதான் நிகழ்ந்திருக்கின்றன.
தட்டித் தடக்கி
தவழ்ந்து
வீழ்ந்து எழுந்து
முகம் ருசித்த மண் சீனியும்
இந்த மண்தான்.
கிளிக்கோடு
கிடுகிடு
நாய் புலி
மண் சோறு
பல்துறை விளையாட்டுகள் கற்றுத்தந்த
மண்ணும் இதுவே.
இன்றும் என் நரைவிழுந்து மறைகின்ற,
எனது அரச தொழில்
நெருங்கிவரும் ஓய்வுவரை
எனது மரணத்தின் பின் உயிர்க்கும் சந்ததிக்கும்
எனது மண் சிவந்து கொண்டிருக்கிறது....

No comments:
Post a Comment