எதுவும் சொல்ல மறுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு இராணுவக் கெடுபிடிக்குள்
சிக்குண்ட கிராமம் போல
நான்.
பக்குவம் எல்லாக் கோணங்களிலும் இறுக்கப்பட்டு
செய்வதறியாது காலம் சுருட்டப்பட்டு,
நேராகச்சென்று மடிய இயலாத தெருவொன்றில்
ஒரு கொலைகாரன் துரத்திக் கொண்டிருப்பதைப் போல.
இயலாமை வலிக்கத் தொடங்கிவிட்டது.
காற்றுக்குள் இடைவெளி தேடும்
ஒரு சின்ன மனசு எனக்குள்ளும் உண்டு.
நான் விலங்கிடப்பட்ட இரவிலிருந்து
விழிக்கவில்லை அல்லது விடுபடவில்லை.
எனது உயிர் புதுப்பிக்கப்படும் வரை.
விழிப்பது நிச்சயம் இல்லாதது.
எல்லோருக்கும் போல
ஒரு சின்ன மனசு இறுகிக்கொண்டிருக்கிறது.

No comments:
Post a Comment